புதன், 20 ஜூலை, 2011

அமெரிக்காவின் கைப்பாவையான சர்வதேச நீதிமன்றம்


அமெரிக்காவின் கைப்பாவையான சர்வதேச நீதிமன்றம்

qaddafi
த ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு அமெரிக்க கைப்பாவை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்தார்கள் என குற்றம் சாட்டி லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபி, அவருடைய மகன் ஸைஃபுல் இஸ்லாம், உளவுப்பிரிவு தலைவர் அப்துல்லாஹ் அல் ஸனூஸி உள்பட 15 பேருக்கு கைது வாரண்டை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டதற்காக இந்நடவடிக்கை என சர்வதேச நீதிமன்றம் கூறுகிறது. லிபியா அரசு இந்த கைது வாரண்டை நிராகரித்த பொழுது சீனாவும், தென்னாப்பிரிக்காவும் சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கை பிரச்சனையை தீர்க்க முற்றிலும் உதவாது என கூறியுள்ளன.
42 ஆண்டுகளாக லிபியாவை ஆட்சிபுரியும் கர்னல் கத்தாஃபிக்கு எதிரான போராட்டங்களை குறித்த நியாயமான காரணங்களுக்கு உள்ளே செல்ல நாம் விரும்பவில்லை. 1969-ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய முஅம்மர் கத்தாஃபி பல வேளைகளிலும் ஒரு முட்டாளைப் போலவே நடந்து கொண்டார் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. அதே வேளையில் சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருந்த மன்னர் இத்ரீஸை பதவியிலிருந்து வெளியேற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் எண்ணெயிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நாட்டின் வளர்ச்சிக்கும், நல்வாழ்வு திட்டங்களுக்கும் பயன்படுத்தினார் என்பதை அவரை விமர்சிப்பவர்கள் கூட ஒப்புக்கொள்கின்றார்கள். அரபுக்களுக்கு எண்ணெய்க்கு நியாயமான விலையை வாங்கிக்கொடுத்தவர் கத்தாஃபி ஆவார்.
கத்தாஃபிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் உண்மையான நிலையைக்குறித்த சந்தேகங்கள் தற்பொழுது எழத்துவங்கியுள்ளன. எண்ணெயின் விலையை டாலரில் ஏற்றுக்கொள்ள ஈரானைப் போல கத்தாஃபியும் மறுத்தது தான் நேட்டோவின் திடீர் விமானத்தாக்குதலின் பின்னணி என சில தகவல்கள் கூறுகின்றன. கத்தாஃபி ஒரு உள்நாட்டு போரை எதிர்கொள்கிறார் என்பதுதான் அதனை விட பரிசீலிக்க வேண்டிய பிரச்சனை ஆகும்.
வெளிநாட்டு உதவியுடன் ஆயுதங்களுடன் போராடும் எதிர்ப்பாளர்களை கத்தாஃபியும் ஆதரவாளர்களும் கைத்தட்டி வரவேற்பார்களா? எதிர்த்து தாக்குதல் நடத்துவார்களா? இதனை சர்வதேச நீதிமன்றம் ஏன் புரிந்துக்கொள்ளவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்களை கொடூரமாக கொலை செய்த இனவெறிப்பிடித்த இலங்கை அரசின் நடவடிக்கையை பார்வையாளராக கண்டுகளித்த சர்வதேச நீதிமன்றம், கத்தாஃபிக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் முற்றிலும் அரசியல் ரீதியிலான பின்னணி உள்ளது என்பதை மறுக்கவியலாது.
சர்வதேச நீதிமன்றத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடாத அமெரிக்கா அல்லது லிபியாவின் மீது தாக்குதல் நடத்தும் இதர ஐரோப்பிய நாடுகளின் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்திய சர்வதேச நீதிமன்றம், இத்தகைய நடவடிக்கையின் மூலம் தனது நம்பகத்தன்மைக்கும், பாரபட்சமற்ற கொள்கைக்கும் பெரும் இழுக்கை சம்பாதித்துவிட்டது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் லிபியா விவகாரம் தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்படாத காரியங்களை நேட்டோ மேற்கொண்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போர்க்குற்றங்களுக்கும், மனித குலத்திற்கு எதிரான அக்கிரமங்களுக்கும் வாரண்டோ, விசாரணையோ, காலவரையற்ற சிறைத்தண்டனையோ இவற்றிற்கெல்லாம் முற்றிலும் தகுதியானவர்கள் ஐரோப்பா-அமெரிக்கா நாடுகளின் தலைமை பதவியை அலங்கரித்த, அலங்கரித்துக் கொண்டிருக்கும் நபர்கள் தாம் என்பதை எவரும் மறுக்கவியலாது. அந்த பட்டியலில் முதலிடத்தில் கத்தாஃபி இல்லை என்பது தான் உண்மை.
அ.செய்யது அலீ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif