வெள்ளி, 20 செப்டம்பர், 2013

குஜராத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடு

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக பின்வரும் கோரிக்கை மனு தமிழக ஆளுநர் வாயிலாக குடியரசு தலைவருக்கு இன்று அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவின் சுருக்கம்:

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற போலி மோதல் சாவுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் துணைத் தலைவர் வன்ஜாரா கடந்த செப்டம்பர் 1 அன்று குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும் உள்துறைச் செயலாளருக்கு பத்து பக்கத்தில் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய மோதல் சாவுகள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்த உண்மைகளும், கருத்துகளும், ஒப்புதல் வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளன.

குஜராத்தில் நடைபெற்ற மோதல் சாவுகளும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குற்றங்களும் மோடி தலைமையிலான மாநில அரசு பின்பற்றி வந்த தெளிவான கொள்கையின் காரணமாக நடைமுறைப்படுத்தியவை என்று வன்ஜாரா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தானும் குஜராத்மாநிலத்தின் இதர காவல்துறை அதிகாரிகளும் மோடியின் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தவே பயன்படுத்தபட்டதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2002 முதல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வந்த இனஅழிவு தொடங்கி அனைத்து முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் மோடி தலைமையிலான அரசின் திட்டமிட்ட செயல்பாட்டின் அடிப்படையில் நடந்தவை என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவர்கள் சொன்ன கருத்துகளை வன்ஜாராவின் இந்த கடிதம் மெய்ப்பித்துள்ளன.
சமீபத்தில் ஒரு ஊடகவியாளர் வெளியிட்டுள்ள வீடியோ மோதல் சாவுகளில் ஈடுபட்ட அமித் ஷா உள்ளிட்ட பா...வினரை காப்பாற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை அம்பலப்படுத்தியுள்ளதுடன் வன்ஜாராவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் மெய்ப்படுத்தியுள்ளது.

குஜராத்தில் நடைபெற்ற மோதல் சாவுகள் உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கைதுச் செய்யப்பட்டுள்ள 32 காவல்துறை அதிகாரிகளின் பங்கு இரண்டாம் பட்சமானது தான். இவர்களை இயக்கியதுடன் அரசியல் சாசன மாண்புகளை அம்மாநிலத்தில் சிதைத்தது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசியல் பிரமுகர்கள் தான்.

இச்சூழலில் மேதகு குடியரசு தலைவர் அவர்கள் தலையிட்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது உரிய நடவடிக்கை எடுத்து குஜராத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க ஆவணச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரர் ஜே.எஸ்.ரிபாயி, தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் பேராசிரியர எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச் செயலாளர் . அப்துல் சமது, மமக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத், தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். ஹனிபா ஆகியோர் மேதகு தமிழக ஆளுநரை அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif