சவூதி அரேபியாவை பொறுத்தவரை கொலை, கற்பழிப்பு போன்ற கடும் குற்றங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அதேவேளையில் கொலையுண்ட குடும்பத்தினர் கொலையாளியை மன்னிப்பதாக கூறினால் மரண தண்டணையிலிருந்து வெளியில் வரலாம்.
அந்த வகையில் பினாய் ரொடோலியோ என்னும் 38 வயது ஃபிலிப்பைன் தேசத்தவர், 13 வருட சிறைவாசத்திற்குப் பின்னர் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு சவூதியர் ஒருவருடன் ஏற்பட்ட பிணக்கில் சவூதியரைக் கொன்றதாக பினாய் எனப்படும் ரொடாலியோ மீது குற்றஞ்சாட்டப்பட்டு, 2001 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதியின் மேல்நிலை நீதிமன்றம் இத்தீர்ப்பை உறுதி செய்த நாள் முதல் கடந்த 13 ஆண்டுகளாக பினாய் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பினாய் க்கு மன்னிப்பை வேண்டி, அவர் குடும்பத்தினர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் தொடர் முயற்சி மற்றும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கொலையுண்டவரின் குடும்பத்தவர் கொலைக் குற்றவாளி பினாயை மன்னித்து விடுவதாகவும், இழப்பீடாக இரத்தப்பணம் சவூதி ரியால்கள் மூன்று மில்லியன் தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று பல்வேறு ஃபிலிப்பினோ நலச்சங்கங்களும் பினாயின் விடுதலைக்காக நிதித்திரட்டி வந்த நிலையில், சுமார் 2.3 மில்லியன் ரியால்களை தானே முன்வந்து செலுத்தியுள்ள சவூதி மன்னர் பினாயின் விடுதலைக்கு வழிகோலியுள்ளார்.
பினாய், விரைவில் மணிலா திரும்ப உள்ளார். பினாயின் விடுதலைக்கு உதவிய சவூதி மன்னருக்கு பினாய் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக