சென்னை : முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மொபைல் போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பேராசிரியர், உடந்தையாக இருந்த சிம் கார்டு விற்பனையாளரது ஜாமின் மனுக்கள், எழும்பூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னை, போலீஸ் கட்டுப்பாட்டறை மொபைல் போனுக்கு, கடந்த 11ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் எஸ்.எம்.எஸ்., ஒன்று வந்தது. இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு, கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா உத்தரவின் பேரில், கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணையில், அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த, கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் யோகேஷ்வரன், 36, கைது செய்யப்பட்டார். அவர், போலியான ஆவணங்கள் மூலம், போலியான முகவரி அளித்து சிம்கார்டு பெற்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலியான முகவரிக்கு சிம்கார்டு விற்றவர் குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினர். விழுப்புரத்தில், மொபைல் போன் சிம்கார்டு விற்பனை செய்து வந்த கல்யாணசுந்தரம், 50, என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் இருவரும், எழும்பூர் முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கந்தசாமி ஆஜராகி வாதாடினார். முடிவில், இருவருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டு, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சிம்கார்டுக்கு போலி முகவரி; கமிஷனர் எச்சரிக்கை : மொபைல் போன் சிம்கார்டு விற்பனை செய்யும் போது, வாடிக்கையாளர்கள் தங்கள் முகவரிச் சான்று அளிக்க வேண்டும். வாடிக்கையாளரின் சரியான முகவரி, போட்டோ ஆகியவை இருக்கிறதா என்பதை விற்பனையாளர்கள் சரிபார்க்க வேண்டும். பல நேரங்களில் சரிபார்க்கப்படுவதில்லை. இந்த வழக்கில் கூட, வேறு ஒருவர் பெயரில், யோகேஷ்வரன், சிம்கார்டு பெற்று மிரட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது குறிப்பிடத்தக்கது. எனவே, ""போலியான முகவரி கொடுப்பவர்களுக்கு சிம் கார்டுகளை விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி எச்சரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக